பெரியாரில் தொடங்கினேன். அள்ள அள்ளக் குறையாத அவருடைய எழுத்துகள் என்னை பிரமிக்க வைத்தன. பிறகு வாசிப்பை அண்ணாவுக்கும் கலைஞருக்கும் நீட்டித்தபோது என்னுடைய கனவு பரிணாம வளர்ச்சி பெற்றது. ஆம். தனித்தனி வாழ்க்கை வரலாறுகளைக் காட்டிலும் இந்த நான்கு சக்திகளும் நிலைகொண்டிருந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் ஆர்வம் முளைவிட்டது.
தேடலைத் தொடங்கியபோது திராவிட இயக்கம் தொடர்பாக நிறைய புத்தகங்கள் கிடைத்தன. குறிப்பாக, நாவலர் நெடுஞ்செழியன், முரசொலி மாறன் எழுதிய புத்தகங்கள். நீதிக்கட்சியைப் பற்றிய ஓரிரு ஆங்கிலப் புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலானவை அச்சில் இல்லை; தீவிரமான தேடலுக்குப் பிறகு இணையத்தில் கிடைத்தன.
தகவல் செறிவு நிறைந்த புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை எல்லாம் திராவிட இயக்க வரலாற்றின் தனித்தனி அத்தியாயங்களாக மட்டுமே பார்க்கமுடியும் என்பது புரிந்தது. திராவிட இயக்க சித்தாந்தத்தின் தோற்றம் தொடங்கி கட்சி அரசியல் வரையிலான முழுமையான பதிவின் அவசியத்தையும் உணர முடிந்தது. எழுதத் தொடங்கி விட்டேன்.
*
புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. நீதிக்கட்சி முதல் அண்ணா ஆட்சி வரை முதல் பாகம். அண்ணாவுக்குப் பிறகான அரசியல் வரலாறு இரண்டாவது பாகம்.
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியாக நீதிக்கட்சியைக் குறிப்பிடுவதுதான் பொதுவான வழக்கம். நான் சற்றே மாறுபடுகிறேன். திராவிட இயக்க வரலாறு என்பது தனிப்பட்ட கட்சியின் வரலாறு அல்ல; தென்னிந்தியாவில் உருவான மாபெரும் மக்கள் இயக்கத்தின் வரலாறு; ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் வரலாறு. அதன் ஆணிவேர் பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்னையில் தொடங்குகிறது. ஆகவே, 1909ல் உருவான சென்னை பிராமணர் அல்லாதார் சங்கத்தில் இருந்து திராவிட இயக்க வரலாறைத் தொடங்கினேன்.
நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்கு முந்தைய பிராமணர் அல்லாதார் இயக்கங்கள் - அரசியல் சூழல், நீதிக்கட்சி உருவான வரலாறு, நீதிக்கட்சி அரசின் சாதனைகள் - சறுக்கல்கள், பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகத்தின் வளர்ச்சி, மொழிப்போராட்டம், திராவிட நாடு கோரிக்கை, திமுக தோன்றிய பின்னணி, அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு என்று அறுபது ஆண்டுகால அரசியல் வரலாறை முதல் பாகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

கலைஞர் தலைமையில் திமுக செயல்பட்ட விதம், பெரியாரின் மறைவு, எம்.ஜி.ஆரின் விலகல், திமுகவின் எதிர்நீச்சல், மாநில சுயாட்சிக் கோரிக்கை, சமூக நீதிப் போராட்டம், ஈழப்பிரச்னை, ஜெயலலிதாவின் வருகை, மறுமலர்ச்சி திமுகவின் உருவாக்கம் என்று அண்ணாவுக்குப் பிறகான நாற்பது ஆண்டுகால அரசியல் வரலாறை இரண்டாவது பாகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

*
வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது, மூலக்கருத்து மாறிவிடாமலிருக்க, தொடர்புடைய தலைவர்களிள் மேற்கோள்களை நன்றியுடன் பயன்படுத்தியுள்ளேன். தலைவர்களுடைய சொல்லாடல்களைப் படிக்கும்போது வாசகர்களுக்கு செய்தியின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.
திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பதிவு செய்வதன்மூலம் தமிழகத்தின் நூறாண்டுகால அரசியல் வரலாற்றைப் பதிவு செய்யும் என்னுடைய நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும். இனி இது உங்கள் சொத்து.
அன்புடன்
ஆர். முத்துக்குமார்
15 டிசம்பர் 2010
(திராவிட இயக்க வரலாறு புத்தகத்தில் நான் எழுதிய முன்னுரையில் இருந்து..)
புத்தகத்தை இணையத்தில் வாங்க
திராவிட இயக்க வரலாறு - பாகம் 1
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
0 comments:
Post a Comment