Saturday, September 12, 2009

என்கெளண்டர் அரசியல்!

இஷ்ராத் என்ற பெண்ணுக்கு வயது பத்தொன்பது. மும்பை தானே மாவட்டத்தின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர். தமது நண்பர்களான ஜாவேத், அம்ஜத் மற்றும் ஜிஸான் ஆகியோருடன் வீதியில் வந்துகொண்டிருந்தார் இஷ்ராத். திடீரென அவர்களுக்கு எதிரில் வந்து நின்றது ஒரு வாகனம். அதிலிருந்து இறங்கிய வாட்டசாட்டமான நபர்கள் இஷ்ராத் உள்ளிட்ட நால்வரையும் வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் திணித்தனர். திமிறினார்கள். முடியவில்லை. வாகனம் காற்றைக் கிழித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டது.

வெலவெலத்துப் போய்விட்டார்கள் நால்வரும். யார் இவர்கள்? தீவிரவாதிகளா? எதற்காக நம்மைக் கடத்தவேண்டும்? அவர்களுடைய குழப்பத்தைத் தீர்த்துவைக்க அந்த நபர்கள் எவரும் தயாராக இல்லை. அவர்கள் காரியத்திலேயே கவனமாக இருந்தனர். தொடர்ந்து மொபைலில் பேசிக்கொண்டிருந்தனர். ஒன்றுமே புரியவில்லை இஷ்ராத்துக்கு. அவர்கள் எதுவுமே பேசாதது இஷராத்தையும் நண்பர்களையும் பதற்றத்தில் ஆழ்த்தியது. அகமதாபாத் நோக்கி விரைந்து கொண்டிருந்தது வாகனம். இது நடந்தது ஜூன் 12, 2004 அன்று,

அடுத்த இரண்டு நாள்களுக்கு இஷ்ராத்தும் அவருடைய நண்பர்களும் எங்கே இருந்தார்கள்? யாருடன் இருந்தார்கள்? அவர்களை வாகன ஆசாமிகள் என்ன செய்தார்கள்? ஒருவேளை விடுவிக்கப்பட்டுவிட்டார்களா? எதுவும் தெரியவில்லை. அவர்களுடைய குடும்பத்தினர் அலைபாய்ந்து கொண்டிருந்தனர்.

ஜூன் 15, 2004. குஜராத் மாநில காவல்துறை சார்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதன் சாரம் இதுதான்.

‘முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சில விஷமிகள் திட்டம் தீட்டியிருந்தார்கள். லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தச் சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்தச் சதிகாரர்களை குஜாத் காவல்துறை புத்திசாலித்தனமாக முயற்சி செய்து கண்டுபிடித்துவிட்டது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்தோம். அப்போது நடந்த என்கௌண்டரில்.....'

சுட்டுக்கொல்லப்பட்ட நால்வருடைய பெயர்களும் அறிவிக்கப்பட்டபோது மும்பையின் மும்ப்ரா பகுதியே கதிகலங்கிவிட்டது. ஆம். மூன்று நாள்களுக்கு முன்பு சில நபர்களால் கடத்தப்பட்ட இஷ்ராத் மற்றும் அவருடைய நண்பர்கள் மூவருமே அந்த என்கௌண்டருக்கு இரையாகி இருந்தனர். அவர்களை மும்பையில் இருந்து கடத்திக்கொண்டு வந்த புஜபல ஆசாமிகள் கடத்தல்காரர்களோ, ரௌடிகளோ அல்ல. சாட்சாத் குஜராத் காவல்துறையினரே.

மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த இஷ்ராத் ஒரு கல்லூரி மாணவி. இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவருகிறார். அதிக வசதியில்லாத குடும்பம். ஆகவே, விற்பனைப் பிரதிநிதியாக பகுதி நேரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவளைச் சுற்றி எப்போதும் தோழர், தோழியர் கூட்டம் இருக்கும். அவர்களில் ஜாவேத், அம்ஜத் மற்றும் ஜிஸான் மூவரும் நெருக்கமான நண்பர்கள்.

‘பயந்த சுபாவம் கொண்டவள் இஷ்ராத். கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே நடுங்கிப் போய்விடக் கூடியவள். அவளைப் போய் தீவிரவாதி என்றும் மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டாள் என்றும் சொல்லிக் கொலை செய்தது அநியாயம். அந்தப் பாதகச் செயலைச் செய்த காவலர்களைத் தூக்கில் போடவேண்டும்' என்று ஆவேசப்படுகிறார் இஷ்ராத்தின் தாயார்.

ஆனால் குஜராத் காவல்துறையின் கருத்தோ மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள் நால்வருமே தீவிரவாதிகள். அதில் ஒருவர் இஷ்ராத்தின் காதலர். மற்ற இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். லஷ்கர் ஏ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள். அவர்களில் ஜாவேத் என்பவர் பிரனேஷ் பிள்ளை என்ற இந்துப்பெயரை வைத்துக்கொண்டு ஓமன் சென்று தீவிரவாத இயக்கத் தலைவர்கள் சிலரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆபத்து எதுவும் நடப்பதற்கு முன்னால் அவர்களைப் பிடிக்க முயன்றோம். காரில் இருந்த அவர்கள் எங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியிருந்தது. அதில்தான் நால்வரும் இறந்துவிட்டார்கள். இதுதான் குஜராத் காவல்துறையின் வாதம்.

நடந்தது என்கௌண்டர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். குஜராத் மாநில காவல்துறையினருக்கு கடந்த சில ஆண்டுகளாக ஒருவித வெறி வந்திருக்கிறது. புரொமோஷன் வெறி. எதைச் செய்தால் முதல்வர் மோடி மகிழ்ச்சியடைவார். அதன்மூலம் நாம் எப்படி லாபம் அடையலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கண்டுபிடித்த உத்தியே இந்த போலி என்கௌண்டர்.

இஸ்லாமிய இளைஞர்கள் சிலரைத் தேர்வு செய்துகொள்வது. பக்காவாகத் திட்டமிட்டு அவர்களைக் கடத்துவது. தீவிரவாதி என்று முத்திரை குத்தி அவர்களை என்கௌண்டர் செய்து கொன்றுவிடுவது. அதன்பிறகு மோடியைக் கொலை செய்யவந்தார் என்று சொல்லி வழக்கை முடித்துவிடுவதோடு அதற்கான பரிசாக புரோமோஷன் வாங்கிக்கொள்வது. இதன் ஒருபகுதியே இஷ்ராத் உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டது என்பது அவர்களுடைய வாதம்.

பொதுவாக எங்கே என்கௌண்டர் நடந்தாலும் அதுகுறித்து உடனடியாக விசாரணை செய்யப்படுவது வழக்கம். அதைப்போலவே மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தாமங் என்பவர் தலைமையில் இந்த என்கௌண்டர் குறித்து விசாரணை தொடங்கியது. விரிவான விசாரணைக்குப் பிறகு அதன் அறிக்கை வெளியானது. அது அறிக்கை அல்ல, அணுகுண்டு என்பது பிறகுதான் தெரியவந்தது.

ஆம். இஷ்ராத் உள்ளிட்ட நால்வர் மீது நடத்தப்பட்டது என்கௌண்டர் அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி என்கௌண்டர் என்று அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்துள்ளது அந்த அறிக்கை. குஜராத் காவல்துறை வெறும் விளம்பரத்துக்காக அப்பாவிகள் நால்வரைக் கொலை செய்துள்ளது. அந்த நால்வரும் திட்டமிட்டே மகாராஷ்டிராவில் இருந்து வெளியேற்றப்பட்டு, அகமதாபாத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்கிறது தாமங் அறிக்கை.

‘போலி என்கௌண்டர் செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதேபோல அவர்கள் தீவிரவாதிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வேண்டுமானால் மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த அஃபிடவிட்டைப் பாருங்கள். அந்த நால்வருடைய சுயரூபம் நன்றாகவே தெரியும் என்கிறார்கள் குஜராத் மாநில காவல்துறையினர்.

அப்படி என்ன இருக்கிறது அந்த அஃபிடவிட்டில்?

என்கௌண்டர் நடந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் ஆளுக்கொரு பக்கம் விசாரணையில் இறங்கியிருந்தனர். அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய உள்துறை இதுவிஷயமாக அஃபிடவிட் ஒன்றைத் தயார் செய்து. அதை சமீபத்தில் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளது. அதில் இஷ்ராத்தும் அவருடைய நண்பர்களும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று இருக்கவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இஷ்ராத் போலி என்கௌண்டர் விஷயத்தில் நரேந்திர மோடி அரசைக் கடுமையாக விமரிசனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மத்திய உள்துறை தாக்கல் செய்த அஃபிடவிட் நிச்சயமாகவே தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம்தான். அதேபோல தாமங்கின் விசாரணை அறிக்கையும் குஜராத் அரசுக்கு நெருடலான விஷயம்.

ஆகவே, தாமங் அறிக்கை - அஃபிடவிட் என்ற இரண்டு சங்கதிகளுக்காக இரண்டு தரப்புமே எதிர்வினை ஆற்றியுள்ளன. ஆம். தாமங்கின் விசாரணை அறிக்கை முறையான அனுமதியுடன் வெளியிடப்படவில்லை. அது ஒருதலைப்பட்சமானதும்கூட என்று நீதிமன்றத்தில் தடை கேட்டது குஜராத் அரசு. தற்போது அந்த அறிக்கைக்கு தடை வழங்கியுள்ளது நீதிமன்றம். மேலும் தாமங்கின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய சட்டத் துறையுடன் கலந்து ஆலோசிக்காமல் தயார் செய்யப்பட்ட அஃபிடவிட்ட தாக்கல் செய்த உள்துறை அதிகாரி ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமது இமேஜைத் தக்கவைத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பிரம்மப்பிரயத்தனம் செய்துவருகின்றன. ஆனால் கொல்லப்பட்ட நால்வரின் குடும்பமும் மீடியாவின் பிடியில் சிக்கிக்கொண்டு தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறது.

Friday, September 4, 2009

லாரியில் அடிபட்டுச் செத்தாரா என்.வி.என். சோமு?

கடந்த மூன்று நாள்களாக என் மூளையைக் குடைந்துகொண்டிருக்கும் சந்தேகம் இது. குறிப்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட கட்டுரையைப் படித்தபிறகு அந்த சந்தேகம் அதிகரித்து விட்டது.
ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த செய்திகுறித்து வெளியான அந்தக் கட்டுரையில் பல பெரிய மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அவர்கள் அத்தனைபேருமே கடந்த காலங்களில் விமான விபத்தில் பலியானவர்கள்.

இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி.. மத்திய அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா.. சபாநாயகர் ஜி.எம்.சி. பாலயோகி.. மோகன் குமாரமங்கலம்.. ஓ.பி. ஜிண்டால்.. சுரேந்திர சிங்.. தேரா நத்துங்.. சி.சங்மா என்று பட்டியல் நீள்கிறது. இன்னும் சில பத்திரிகைகள் விமான விபத்தில் இறந்த நடிகை செளந்தர்யாவின் பெயரையும் மறக்காமல் பட்டியலில் சேர்த்திருந்தன.

மொரார்ஜி தேசாய், சுக்பீர் சிங் பாதல், அமரீந்தர் சிங், ராஜ்நாத் சிங் என்று விமான விபத்தில் சிக்கி, பத்திரமாக உயிர்பிழைத்தவர்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்கள் சொல்ல மறந்த பெயர், என்.வி. என்.சோமு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வடசென்னை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்தவர். முதலில் தேவே கெளடா அமைச்சரவையிலும் பிறகு ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையிலும் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்தவர்.

1997 நவம்பர் மாதத்தில் அருணாச்ச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த விமான விபத்து ஒன்றில்தான் மரணம் அடைந்தார். ஆனால் அவருடைய பெயரை எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர வேறு காரணம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

சில நிமிடங்களுக்கு முன்பு சிஎன்என் ஐபிஎன் ஒளிபரப்பிய வீடியோ தொகுப்பு இது. சோமுவை இங்கும் காணவில்லை.

Thursday, September 3, 2009

இரண்டு கட்டுரைகளுக்கு இருபது ஆண்டு சிறை!

நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பலர் உறைந்து போயிருக்கிறார்கள். சர்வாதிகார ஆட்சியில் மட்டுமே இது சாத்தியம் என்ற கருத்து வலுவடைந்து வருகிறது. ஆம். பத்திரிகையில் ஏதோ எழுதக்கூடாத ஒன்றை எழுதிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைதாகியிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கொடுத்திருக்கிறது.

ஆகப்பெரிய தண்டனையைக் கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன எழுதிவிட்டார் அந்தப் பத்திரிகையாளர்? அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் அவரைப் பற்றிய சில சங்கதிகளைத் தெரிந்துகொண்டு விடுவது நல்லது. இலங்கையில் இருக்கும் பிரபல தமிழ் பத்திரிகையாளரான ஜெயப்ரகாசம் திசநாயகம் இலங்கையில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் முக்கியமான பத்தி எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர்.

நார்த் ஈஸ்டர்ன் மன்த்லி என்ற பத்திரிகையை நடத்திவந்த இவர், அவுட்ரீச் ஸ்ரீலங்கா என்ற இணையப் பத்திரிகை ஒன்றையும் ஜசிகரன் என்ற தனது நண்பருடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். 2006 தொடக்கத்தில் இலங்கை அரசு ராணுவத்தைக் கொண்டு தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து நார்த் ஈஸ்டர்ன் மன்த்லியில் பல கட்டுரைகளை எழுதினார். குறிப்பாக, தமிழ் மக்கள் பூர்விகப் பகுதிகளில் இருந்து வலுக்கட்டாயமாகவும் வன்முறைத் தாக்குதல் மூலமாகவும் வெளியேற்றப்படுவது குறித்து கடுமையான கண்டனக் கட்டுரைகளை எழுதினார்.

அதில் அவர் வைத்த குற்றச்சாட்டுகள், புள்ளிவிவரங்கள் இலங்கை அரசை ஆத்திரம் அடைய வைத்தன. குறிப்பாக, ஜூலை 2006ல் அவர் எழுதிய தலையங்கம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில், ‘இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கப்போவதில்லை என்பது வெளிப்படையான விஷயம். உண்மையில், தமிழர்கள்
மீதான படுகொலைகளுக்குக் காரணமான விஷமிகளே இலங்கை உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர்தான்’ என்று எழுதினார்.

அடுத்து, நவம்பர் 2006ல் எழுதிய தலையங்கத்தில், ‘அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகள் போய்ச்சேராமல் தடுப்பதன்மூலம் வாகரையில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் சமயத்தில் வாகரை மீது ஏவுகணை உள்ளிட்ட வான்வழித்தாக்குதல்கள்கூட நடத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்’ என்று எழுதினார்.

இதன்பிறகு திசநாயகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இலங்கை காவல்துறை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியது. திடீரென அவரைக் கைது செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து இலங்கை தீவிரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் மார்ச் 7, 2008 அன்று திசநாயகத்தைக் கைது செய்தனர். அதற்கு முதல்நாளே திசநாயகத்தின் நண்பரான ஜசிகரன் மற்றும் அவருடைய மனைவி வளர்மதி ஆகியோரையும் கைது செய்தனர்.

விசாரணை நடந்துவந்தது. ஆனால் எதற்காக இந்தக் கைது? எந்தப் பிரிவில் கைது? என்பது பற்றி எந்தவிதமான தகவலும் வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழிந்தபிறகே தீவிரவாதத் தடுப்பு சட்டத்தின்கீழ் (பிடிஏ) அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.

இதற்கிடையே கடந்த திங்கள்கிழமையன்று (ஆகஸ்டு 31, 2009) அன்று உயர்நீதிமன்ற நீதிபதி தீபாளி விஜிசுந்தரா வழக்குக்கான தீர்ப்பை வாசித்தார்.

‘திசநாயகத்தின் கட்டுரைகள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாத இயக்கங்களிடம் இருந்து ஏராளமான நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு பத்திரிகை மற்றும் இணையப் பத்திரிகையை நடத்தியுள்ளதும் நிரூபணம் ஆகியுள்ளது. ஆகவே, திசநாயகத்துக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கிறேன்’

விமரிசித்து எழுதிய காரணத்துக்காக பத்திரிகையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது உலகம் முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, கடத்தப்படுவது, கொலை செய்யப்படுவது என்பதெல்லாம் இலங்கைக்குப் புதிய விஷயமில்லைதான். ஆனால் இவையனைத்துமே சட்டவிரோதமாக அல்லது ரகசியமாக செய்யப்பட்டவை. ஆனால் இந்தத் தீர்ப்பு பத்திரிகையாளருக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை என்பதுதான் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Friday, August 28, 2009

காங்கிரஸ் மற்றும் ஐ.பி.எல்

நான் எழுதிய இரண்டு புத்தகங்கள் இந்த மாதம் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மற்றும் அகம் புறம் ஐபிஎல். இரண்டுமே மினிமேக்ஸ் வெளியீடுகள்.



கட்சிகளின் கதை வரிசையில் மினிமேக்ஸ் சார்பாக இதுவரை எட்டு புத்தகங்கள் வெளியாகியுள்ளன். திமுக, அதிமுக, பாமக, மதிமுக, சி.பி.எம், பாஜக, தேமுதிக, சிவசேனா என்ற எட்டு புத்தகங்களும் தற்போது விற்பனையில் உள்ளன. இவற்றில் திமுக, அதிமுக, பாமக மூன்றும் நான் எழுதியவை. காங்கிரஸ் கட்சியின் சுருக்கமான வரலாறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். தற்போது அது வெளியாகியுள்ளளது. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் தொடங்கி சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு முக்கிய அசைவுகளையும் சுருக்கமாகப் பதிவு செய்யும் முயற்சி இது. புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும்.



அகம் புறம் ஐபிஎல். 2009க்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் நான் எழுதிய தொடரின் நூல் வடிவமே இந்தப் புத்தகம். தொடங்கப்பட்ட நொடியில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய சங்கதியாக ஐ.பி.எல் பார்க்கப்படுவது ஏன்? விளையாட்டு வியாபாரமாக மாறியது எப்படி? கிரிக்கெட்டுக்குள் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் வருகிறது? அமைதியான கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்தது எப்படி? வீரர்கள் தீர்மானித்த விளையாட்டை திரைப்பட நட்சத்திரங்கள் கைப்பற்றியது நல்லதா? என்ற பலகேள்விகளைப் பற்றி விவாதிக்கிறது இந்தப் புத்தகம். புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும்.

Wednesday, August 26, 2009

பெரியார் - ஒரு விமரிசனம்


இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார்.

கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும். பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.

இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது. தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது.

'பெரியார்' என்ற பெயரில் நான் எழுதியிருக்கும் ஈ.வெ.ராமசாமியாரின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு அன்பர் ஒருவர் எழுதிய மதிப்புரை இங்கே: