ஹெட்லி மற்றும் ரானா. இந்தியா முழுக்க இந்த இரண்டு நபர்களைப் பற்றித்தான் பேச்சு, சர்ச்சை, விவாதம், பரபரப்பு எல்லாமே. அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து என்கிறார்கள். மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்கிறார்கள். இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டனர் என்கிறார்கள். லஷ்கர் ஏ தொய்பா, ஹுஜி போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்கிறார்கள். நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது இந்த ஹெட்லி - ரானா விவகாரம். தற்போது பாலிவுட் நட்சத்திரங்கள் பதினைந்து பேருடன் ஹெட்லி நட்பு வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனில், யார் இந்த ஹெட்லியும் ரானாவும்? இவர்களுடைய பின்னணி என்ன?
அமெரிக்காவின் சிகாகோ நகரில் டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவரை கடந்த மாதம் அமெரிக்க தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரிகள் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்பதுதான் அவர்மீது சொல்லப்பட்ட முதல் குற்றச்சாட்டு. உட்கார வைத்து விசாரித்தனர். அப்போது முகமது நபியின் படத்தை வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட திட்டங்களுடன் ஹெட்லி இருந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தாஹாவுர் ஹுஸைன் ரானா என்பவரையும் அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர். பிறகு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
ஹெட்லி அமெரிக்காவைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் வம்சாவளி. நிஜப்பெயர் தாவூத் ஜிலானி. 2006ல் தன்னுடைய பெயரை டேவிட் கோல்மன் ஹெட்லி என்று மாற்றிக்கொண்டார். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டார் என்பதுதான் அமெரிக்க போலீஸார் சுமத்தும் குற்றச்சாட்டு.
ரானா கனடாவைச் சேர்ந்தவர். பூர்விகம் பாகிஸ்தான். ஃபர்ஸ்ட் வேல்ட் இமிக்ரேசன் சர்வீஸ்
என்ற நிறுவனத்தை சிகாகோ மற்றும் டொரண்டோவில் நடத்திவரும் ரானாவுக்கு லஷ்கர் ஏ தொய்பாவுடன் நெருக்கமான தொடர்பு உண்டு. சிகாகோ, டொரண்டோ உள்ளிட்ட பல இடங்களில் உணவுப்பொருள் மற்றும் மளிகைப்பொருள் விற்பனை நிறுவனங்களை நடத்திவருகிறார். ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டங்கள் பலவற்றுக்குத் திட்டமிட்டவர் என்கிறது எஃப்.பி.ஐ. இருவருமே பாகிஸ்தானில் இருக்கும் ஹசன் அப்துல் மிலிட்டரி கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.
விசாரணை தொடரத் தொடர பல அதிர்ச்சியூட்டும் சங்கதிகள் வெளிவரத் தொடங்கின. அதில் இந்தியா குறித்த தகவல்கள் மிகவும் முக்கியமானவை.
1. ஹெட்லி மற்றும் ரானா இருவருக்கும் மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மற்றும் அவர்களை இயக்கிய நபர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. குறிப்பாக லஷ்கர் ஏ தொய்பாவின் தலைவர்கள் மற்றும் ஹர்கத் உல் ஜிஹாதி இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான இலியாஸ் கஷ்மீரி உள்ளிட்ட சிலருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
2. மும்பை தாக்குதலை நடத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது 2005ல் இருந்தே ஹெட்லியும் ரானாவும் இந்தியாவுக்குப் பலமுறை வந்து சென்றுள்ளனர். குறிப்பாக, டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி, புனே என்று பல்வேறு இடங்களில் சிலகாலம் தங்கியிருந்துள்ளார் ஹெட்லி. ஹைதராபாத் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் இவருடைய பங்களிப்பு இருக்கிறது.
2. தெற்கு மும்பையில் சியாம் நிவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில், சுமார் ஒரு வருடம் ஹெட்லி தங்கி உள்ளார். சிந்தி இனத்தை சேர்ந்த வயதான தம்பதியிடம் தன்னை வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் ஏஜென்ஸி நடத்துபவராக அறிமுகம் செய்துகொண்டு அவர்கள் வீட்டில் பேயிங் கெஸ்டாகத் தங்கியுள்ளார். அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் மும்பையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் அவருடைய வீட்டில் இருந்து நடக்கும் தொலைவுதான்.
3. புனே நகரில் இருக்கும் ஓஷோ ஆசிரமத்துக்கு இரண்டு முறை ஹெட்லி சென்று வந்துள்ளார். பக்தரைப் போல அமைதியாகச் சுற்றிப்பார்த்துவிட்டு, அங்குள்ள கோராகோவ் பூங்காவில் தியானம் செய்துவிட்டு வந்திருக்கிறார். நோட்டம் பார்க்கவும் வந்திருக்கக்கூடும்.
4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ஹெட்லிக்கு உதவி செய்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் இருக்கும் கூட்டாளிகளுடன் தொடர்பு கொள்ள சேட்டிலைட் போன்களை அந்த அதிகாரிகள் ஹெட்லிக்குக் கொடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடிக்கடி வந்து செல்வதற்கு வசதியாக விசா ஏற்பாடுகளை இவர்களே செய்துகொடுத்திருக்க்கூடும்.
5. மும்பை தாக்குதலுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தாஜ் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ், டிரைடண்ட் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களைப் புகைப்படமாக எடுத்து அப்துல் கஸாப் உள்ளிட்ட பத்து தீவிரவாதிகளுக்குக் கொடுத்துள்ளதில் ஹெட்லி மற்றும் ரானாவுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது.
5. இந்தியாவின் முக்கிய நகரங்களில் பல வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் கல்பாக்கம், உத்தரப்பிரதேசத்தின் நரோரா, கர்நாடகத்தின் கைகா, குஜராத்தின் காக்ரபார், மராட்டியத்தின் தாராபூர், ராஜஸ்தானின் கோட்டா ஆகிய இடங்களில் இருக்கும் ஆறு முக்கிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இந்திய அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்படத் தொடங்கினர். ஹெட்லியும் ரானாவும் சென்றுவந்துள்ளதாகக் கூறப்படும் பல இடங்களுக்கும் நேரில் சென்று புலனாய்வு செய்யத் தொடங்கினர். தற்போது அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்பாக்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடற்படை, கடலோர காவல் படை விமானப்படை வீரர்கள் மற்றும் போலீசார் உள்பட ஏறத்தாழ எழுபது வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் உள்ள தொழில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் இருக்கின்றனர். மாவட்ட போலீசாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்திய காவல்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் களமிறங்கியபிறகு மேலும் சில ரகசியங்கள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. ஆம். ஹெட்லி மும்பையில் தங்கியிருந்தபோது, அவனுக்கும் பிரபல பாலிவுட் பட அதிபர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. ஹெட்லி பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் இண்டர்நெட் மையங்களை ஆராய்ந்தபோது லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதிகளுக்கு ஹெட்லி அனுப்பிய இ மெயில்களில் ராகுலின் பெயர் இடம் பெற்றுள்ளது.
உடனடியாக மும்பை காவல்துறை ராகுல் பட்டிடம் விசாரணை நடத்தியது. அப்போது உடற்பயிற்சி செய்யும் இடத்தில் தற்செயலாக எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் சில பாலிவுட் நட்சத்திரங்களை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். மற்றபடி, அவருடைய தீவிரவாதப் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார் ராகுல் பட்.
ராகுல் பட்டுக்கும் ஹெட்லிக்கும் பாலமாக செயல்பட்ட ஒருவரையும் போலீஸ் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்திருக்கிறது. ஹெட்லிக்கு உதவியதாக கருதப்படும் சுற்றுலா வழிகாட்டிகள் இருவரிடமும் விசாரணை நடக்கிறது.
மும்பையில் ஹெட்லி தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்ததே ராகுல் பட் என்ற சந்தேகம் எழுந்திருப்பதால் ராகுல் பட் மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்று தேசிய புலனாய்வு அமைப்பு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதே போன்று ஹெட்லியுடன் தொடர்புடைய மேலும் மூவருக்கு தடை போடப்பட்டு இருக்கிறது.
ஹெட்லியுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கரன் கபூர், கங்கனா ரனாவத், தாரா சர்மா உள்ளிட்ட பதினைந்து பாலிவுட் நட்சத்திரங்களை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்துவருகிறார்கள். இவர்களுடன் வலுக்ணீட்டாயத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பல நாசகார வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளன. அமெரிக்க அதிகாரிகள் ஒருபக்கம் ஹெட்லி மற்றும் ரானாவிடம் நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இங்கே இந்திய அதிகாரிகள் பல இடங்களிலும் பல நபர்களிடமும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். விசாரணை தொடரத் தொடர இன்னும் என்னென்ன பூகம்பங்கள் கிளம்ப்பப்போகிறதோ!